பெடல்கியூஸ் அல்லது திருவாதிரை என்று அழைக்கப்படக்கூடிய நட்சத்திரம் கடந்த ஆண்டில் இருந்து அறிஞர்களால் பெரிதும் சிலாகிக்கப்படுகிறது. காரணம் என்னவெனில் அந்நட்சத்திரம் வெடித்து சூப்பர் நோவா நிகழ்வை நம் கண்ணுக்கு காட்டும் என்று அறிஞர்கள் நினைத்தனர். 2019 ஆம் ஆண்டின் இறுதியில் பெடல்கியூஸ் அல்லது திருவாதிரை நட்சத்திரமானது அதன் ஒளிரும் தன்மையில் குறைவதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். அதன் தொடர்ச்சியாக சில மாதங்களுக்கு அந்நட்சத்திரம் பிரகாசம் குறைவது தொடர் நிகழ்வாக இருந்தது. பலரின் சித்தாந்தங்களின் படி இவ்வாறு ஒரு நட்சத்திரம் ஒளி குறைவதானால் நிச்சயமாக அது சூப்பர்நோவா வெடிப்பை நோக்கி செல்லும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நட்சத்திரம் பூமியிலிருந்து 724 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.
இந்த பெடல்கியூஸ் அல்லது திருவாதிரை நட்சத்திரத்தை பற்றி, அதன் ஒளிரும் தன்மை பற்றி ட்விட்டரில் ஒரு தனி கணக்கு ஒன்று கூட ஆரம்பிக்கப்பட்டது. இன்றும் அது செயல்பட்டு வருகிறது.
இதன் பிரகாசம் குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து கொண்டே வந்தது. திடீரென அதன் ஒளிரும் தன்மை சுருங்கியதும், திடீரென ஒளிரும் தன்மை அதிகரித்ததும் விஞ்ஞானிகளுக்கு பல புதிர்களை ஏற்படுத்தியது.
கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரியில் கிட்டத்தட்ட இதன் பிரகாசம் 35 சதவீதத்திற்கும் கீழ் ஆக குறைந்தது.
இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நேச்சர் ஆய்விதழில் வெளிவந்த கட்டுரையில் திருவாதிரை நட்சத்திரத்தின் பிரகாசம் குறித்து சில தீர்வுகள் முன்வைக்கப்பட்டுள்ளன . அக்கட்டுரை என்ன சொல்கிறது என்றால், பெடல்கியூஸ் நட்சத்திரத்தின் பிரகாசம் குறைந்ததற்கு காரணம் அதன் தூசுகளே என்கின்றனர்.
திருவாதிரை நட்சத்திரத்தை சுற்றியுள்ள குளிர்ந்த தூசிக் கூட்டங்கள் அவற்றில் பிரகாச குறைவுக்குக் காரணம் என தெரியவந்துள்ளது. இத்தகைய குளிர்ந்த தூசுக்கள் பெடல்கியூஸ் நட்சத்திரத்தின் மேற் பகுதியில் இருந்து வரும் ஒளியை தடுப்பதனால் பூமியிலிருந்து அதைப் பார்க்கும் போது அதன் பிரகாசம் குறைவதாக தெரிகிறது என அந்த ஆய்வு குறிப்பு தெரிவிக்கிறது. இதன் மூலம் திருவாதிரை நட்சத்திரத்தைச் சுற்றி இருந்த மர்மம் விலகியுள்ளது.
ஒலிக்குறிப்பு இங்கே
வாங்கிப் படியுங்கள் வியக்கவைக்கும் விண்வெளி கருந்துளைகள்,Viyakka Vaikkum Vinveli Karundhulaigal